வட மாகாண சபை அமர்வு இன்று (10) இடம்பெற்ற சந்தர்ப்பத்திலேயே கடமை நிறைவேற்று அதிபர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் தரம் மூன்றுக்கான நியமனத்தின் பின்னர், தாங்கள் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கடமை நிறைவேற்று அதிபர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆகவே, தம்மை தொடர்ந்தும் அதிபர்களாகக் கடமை புரிவதற்கு அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வட மாகாண கல்வி அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளமையினால் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட சிலரே ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சென்று கலந்துரையாடினர்.
இதேவேளை, இன்றைய வட மகாண சபை அமர்விலும் இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, வட மாகாண பதில் முதலமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் கடமை நிறைவேற்று அதிபர்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.



